சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றிய துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர், தாம் கண்டெடுத்த இரு பணப்பைகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவற்றில் இருந்த கடன்பற்று, ரொக்கக் கழிவு அட்டைகளைக் கொண்டு செலவு செய்தார்.
கியோங் சுன் யோங், 46, எனும் அந்த ஆடவருக்கு புதன்கிழமை 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மோசடி, நம்பிக்கை மோசடி தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவையில் (சேட்ஸ்) ஆயுதமேந்திய துணைக் காவல்துறை அதிகாரியாக கியோங் பணியாற்றினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி கியோங் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இருவருக்கு அவர் முழுமையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தவிட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் அவர் பணியிலிருந்து விலகியதாக அறியப்படுகிறது.
இந்த வழக்கில் கியோங்கை வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை. தம் மனைவியுடன் நீதிமன்றத்துக்குச் சென்ற அவர், தண்டனையைக் குறைக்கும்படி மாண்டரின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் கேட்டுக்கொண்டார்.