இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் போர் வெடிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
எனவே, சிங்கப்பூரைத் தற்காக்க சிங்கப்பூர் ஆயுதப் படைக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்குவது அவசியம் என்று அவர் வலிறுத்தியுள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு தற்காப்புக்கு ஒதுக்கப்படும் என்றார் அவர்.
இதன்மூலம் சிங்கப்பூர் ஆயுதப் படை வலுவானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு வலுசேர்க்க மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளை அமைச்சர் இங் பட்டியலிட்டார்.
அதில் எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதும் அடங்கும்.
ரஷ்யா-உக்ரேன் போர் அதன் மூன்றாவது ஆண்டுக்குள் நுழைந்திருப்பது, இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் காஸாவில் மட்டும் இன்றி வேறு நாடுகளுக்கு பரவக்கூடிய அபாயம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஆகியவற்றை அவர் சுட்டினார்.
எனவே, வட்டார நாடுகள் அளவிலும் உலகளாவிய நிலையிலும் போர் வெடிக்கும் அபாயம் இல்லை என்று கூறிவிட முடியாது என்று திரு இங் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வரும் என்ற எண்ணத்துடன் அரசாங்கம், தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப் படை திட்டமிடுவதில்லை என்றார் அவர்.
எதிர்வரும் நிதி ஆண்டில் தற்காப்பு அமைச்சுக்காக $20.2 பில்லியன் ஒதுக்கப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 விழுக்காடு அதிகம்.