மார்ச் 1ஆம் தேதி முதல் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், சிறப்பு சிகிச்சை அளிக்கும் வெளிநோயாளி மருந்தகங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் நோயாளிகள், வருகையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.
அத்துடன், பிப்ரவரி 29 தேதி சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள், பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருந்தகங்கள், பல்சிகிச்சை மருந்தகங்கள் ஆகிய இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.
எனினும், இவ்விடங்களில் முதியோர், சுவாசம் தொடர்பான கடும் நோயுள்ளோர், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டது.
அடிக்கடி வரும் நோயாக உருவாகியுள்ள கொவிட்-19 நோய்க்கு மக்களிடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சு கூறியது. இதைத் தொடர்ந்து கொவிட்-19 நோயை எதிர்கொள்ளும் நடைமுறைகளில் இது மேலும் ஒரு கீழிறக்கப்படி என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.
இது ஒருபுறமிருக்க, உள்நோயாளி சிகிச்சை பிரிவுகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், சுகாதார இல்லங்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள், வருகையாளர்கள் ஆகியோர் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சு விளக்கமளித்துள்ளது.
“இவ்விடங்களில் தொற்று நோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் ஒரு நிரந்தர அம்சமாக இது இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்,” என்று அமைச்சு கூறியது.
எனினும், மருத்துவமனை உள்நோயாளிகள், சுகாதாரப் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிகிச்சை பெறுவோர் ஆகியோர் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
“இருப்பினும், சுதாதார பராமரிப்பு இல்லவாசிகளும் அவர்கள் உடல் நலமின்றி இருந்தாலோ கடும் சுவாச பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டாலோ நல்ல நடைமுறையாக முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.