வருங்காலத்தில் ஊழியர் அணிக்கு செயற்கை நுண்ணறிவில் ஏற்றம் தரும் நோக்கில் சிங்கப்பூர் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதில் ஓர் அங்கமாக தனியார், பொதுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் புத்தாக்கத்தை புகுத்தும் நோக்குடன் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மேம்பட்ட கணினிச் சில்லுகள் வாங்க $500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் குறைந்தது $27 மில்லியன், செயற்கை நுண்ணறிவில் தேர்ச்சி பெற 100 சிங்கப்பூர் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத் திட்ட உபகாரச் சம்பளம் வழங்கப்படும். மேலும் சிங்கப்பூருடன் ஒன்றிணைந்து பணியாற்ற உலக அளவிலான நிபுணர்களும் வரவழைக்கப்படுவர்.
இதை வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தகவல், தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது அமைச்சின் செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தரவு அறிவியலாளர்கள், இயந்திரப் பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவை உருவாக்குவோர், பயனர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று சமூகங்கள் உருவாவதில் பேருதவி புரியும் என்றார் அமைச்சர்.
“செயற்கை நுண்ணறிவில் விருப்பமுடைய எல்லா நகரமும் இதுபோன்ற உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள், பயனர்கள் என எத்தனை பேரைப் பெற முடியுமோ அத்தனை பேரை பெற விருப்பம் கொண்டிருக்கும். இதில் போட்டித்தன்மை மிகவும் கடுமையானது,” என்று திருவாட்டி ஜோசஃபின் டியோ கூறினார்.
இவ்வாண்டு வரவுசெலவு திட்டத்தில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார். இது எவ்வாறு பங்கிட்டு செலவிடப்படும் என்பதை அமைச்சர் ஜோசஃபின் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவு தேர்ச்சி பெற்ற திறனாளர்களை உருவாக்க $27 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட உள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை குறைந்தது 15,000ஆக அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இது செயற்கை நுண்ணறிவு 2.0 பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டார். அந்த உத்திபூர்வ திட்டத்தின்படி, அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துபவையாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மெக்பர்சன் தொகுதி உறுப்பினர் டின் பெய் லிங், பாசிர் ரஸ் - பொங்கோல் குழுத்தொகுதி உறுப்பினர் ஷாரேயில் தாஹா ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.