மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சிங்கப்பூர் வங்கி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அவரின் வங்கிக் கணக்கில் இருந்த 800,000 வெள்ளியை ஏமாற்றிப் பறித்திருக்கிறார்.
ஆடவருக்கு உதவுவது போல் நடித்த அந்தப் பெண், வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படாதபடி மோசடியில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் 2021ஆம் ஆண்டு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 வயது ஆடவர், பக்கவாதத்துக்கு ஆளாகி மனநலம் குன்றியவராக இருந்தார்.
ஆடவரை வங்கிக்கு அழைத்து வந்த முன்னாள் காதலி, அவரின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த தொகையையும் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்.
சந்தேகம் வந்த வங்கி ஊழியர் ஆடவரிடம் பேசினார். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆடவரால் பதிலளிக்க முடியவில்லை. பின்னர் வங்கி ஊழியர் அந்தப் பெண் கேட்டது போல் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றினார்.
ஆடவர் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் வழக்குத் தொடுத்து, பெண்ணிடமிருந்து தொகையை மீட்டனர்.
இதுபோன்ற மோசடிகளைத் தடுப்பது கடினம். குறிப்பாக மோசடியில் ஈடுபடும் நபர் உறவினர் அல்லது நண்பராக இருந்தால் அதை அடையாளம் காண்பது மேலும் கடினம் என்கின்றனர் அதிகாரிகள்.
மூத்தோர், மனநலம் குன்றியவர்கள் போன்றவர்களுடன் வங்கிக்கு வந்து சந்தேகம் ஏற்படும் வகையில் பெரும் தொகை பரிமாற்றம் செய்வதைத் தடுக்க ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்களால் சிலமுறை இதுபோன்ற வாடிக்கையாளர்கள் மனநலம் சார்ந்த மோசடிகளைத் தடுக்க முடியாமல் போகிறது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.