அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வெள்ளிக்கு உணவு, பொருள்களை வழங்கும் திட்டத்தை புக்கிட் பாஞ்சாங் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய ‘டாலர் டீல்ஸ்’ திட்டம்வழி, பிப்ரவரி 2025 வரை மாதந்தோறும் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் அன்றாடத் தேவைகளையும் சலுகைகளையும் ஒரு வெள்ளிக்குப் பெறலாம்.
100,000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களை ஓராண்டு காலத்துக்கு புக்கிட் பாஞ்சாங் அடித்தள அமைப்புகள், 24 பங்காளிகள், வணிகங்களுடன் இணைந்து வழங்கும். இப்பட்டியல் தொடர்ந்து வளரக்கூடும்.
காலை உணவு, காய்கறிகள், முட்டை போன்றவை இதில் அடங்கும். பண்டிகைக்காலங்களில் பள்ளிவாசல்கள், கோவில்கள் போன்ற சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சிறப்புப் பொருள்களும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, மார்ச் 2ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குடியிருப்பாளர்களுடன் உரையாடினார்.
புக்கிட் பாஞ்சாங் தொகுதியின் பத்து வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் $1 பற்றுச்சீட்டைக் கொடுத்து மதிய உணவைப் பெற்றனர். இலவச காய்கறி சூப்பும் வழங்கப்பட்டது. மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் உணவு, பொருள் வழங்கும் திட்டம் நடைபெறுகிறது.
மொத்தம் 5,000 ஒரு வெள்ளி பற்றுச்சீட்டுகள் முன்கூட்டியே விற்பனையாகின. சமூக மன்றங்களிலும் குடியிருப்பாளர்க் குழுக்களிலும் இப்பற்றுச்சீட்டுகளை மக்கள் வாங்கினர்.
முதியோர், உடற்குறைபாடுள்ளோருக்கு தொண்டூழியர்கள் வீடுவீடாகச் சென்று பற்றுச்சீட்டுகளை வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய தினம் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட “புக்கிட் பாஞ்சாங் $1 காப்பி, தே-ஓ’ திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதத்தின் முதல் திங்கட்கிழமைகளில் $1க்கு ரொட்டியுடன் காப்பி அல்லது தேநீர் அடங்கிய காலைச் சிற்றுண்டி புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி நிலையத்திலுள்ள ‘அ பாங் தே தாரேக்’ கடையில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மேலும் பல வணிகங்களையும் பங்காளிகளையும் இணைக்கவுள்ளதாக திரு லியாங் கூறினார்.