மெல்பர்ன்: சிங்கப்பூர் - ஆஸ்திரேலியத் தலைவர்களின் ஆண்டு மாநாட்டிலும் ஆசியான் - ஆஸ்திரேலிய சிறப்பு மாநாட்டிலும் கலந்துகொள்ளும் பிரதமர் லீ சியன் லூங் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை மெல்பர்ன் செல்ல உள்ளார்.
அவரது மூன்று நாள் ஆஸ்திரேலிய பயணத்தில் அவர் அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனிசைச் சந்திப்பார். இந்தச் சந்திப்பு நிகழ்வு 2015ஆம் ஆண்டு கையெழுத்தான சிங்கப்பூர் - ஆஸ்திரேலிய முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தத்தின்கீழ் இடம்பெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இருதரப்புச் சந்திப்பில் இருநாட்டுப் பிரதமர்களும் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தொடர்பாகவும் வட்டார, அனைத்துலக நிலவரம் தொடர்பாகவும் கருத்துப் பரிமாறிக்கொள்வர்.
இவ்விரு தலைவர்களும் கடைசியாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்தனர்.
அத்துடன், பிரதமர் லீ ஐம்பதாண்டு ஆசியான்-ஆஸ்திரேலிய கலந்துரையாடல் உறவை நினைவுகூரும் விதமாக ஆசியான் - சிங்கப்பூர் உச்சநிலை மாநாட்டிலும் கலந்துகொள்வார்.
ஆஸ்திரேலியா, ஆசியானுடன் நீண்டகால உறவு கொண்டுள்ளது. அது ஆசியானுடன் ஆகப் பழமையான கலந்துரையாடல் நாடாகவும் 1974ஆம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது.
இந்தச் சிறப்பு மாநாடு முதன்முதலில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்றது. அது இரண்டாம் முறையாக இவ்வாண்டு நடைபெற உள்ளது என்று இது குறித்த பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
மாநாட்டில் ஆசியான் - ஆஸ்திரேலியத் தலைவர்கள் உறவுகளை வலுவாக்கவும் விரிவுபடுத்துவதும் குறித்து வழிவகைகளை ஆராய்வர், குறிப்பாக பசுமை, மின்னிலக்கப் பொருளியல் தொடர்பாக என்று கூறப்படுகிறது.
ஆசியான் அமைப்பும் ஆஸ்திரேலியாவும் கடந்த 2021ஆம் ஆண்டு முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ அமைப்பை ஏற்படுத்தின. எரிசக்தி உருமாற்றம், ஆட்கடத்தலை முறியடிப்பது ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது இதன் நோக்கம்.
“இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்புக்கும் அக்கறைக்குரிய பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாறிக்கொள்வர். அத்துடன், திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மைமிக்க வட்டாரத்தை உருவாக்குவது குறித்தும் கருத்து பரிமாறிக்கொள்வர்,” என்று பிரதமர் அலுவலக அறிக்கை விளக்கியது.