அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளின் உடலிலிருந்து அகற்றப்பட்டும் புற்றுநோய்க் கட்டிகளை, அடுத்த 10 நாள்களுக்கு உயிருடன் வைத்திருக்கும் வழிமுறையை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய்க்கு எதிரான வெவ்வேறு மருந்துகளையும் சிகிச்சைமுறைகளையும் அவற்றில் பரிசோதிக்க இது உதவும்.
புற்றுநோயாளிகள் பயனற்ற சிகிச்சைமுறைகளில் நேரத்தை வீணாக்குவதையும் தேவையற்ற, விலை அதிகமான சிகிச்சைகளை அவர்கள் பெற நேர்வதையும் தடுக்க இத்தகைய பரிசோதனைகள் வழிவகுக்கும்.
மனிதர்களின் கண்கள், மூட்டெலும்புகளில் காணப்படும் ‘ஹையலுரோனிக் அமிலம்’ எனப்படும் வேதிப்பொருளின் அடிப்படையில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் ‘ஹைட்ரோஜெல்’ ஒன்றை உருவாக்கியுள்ளனர். உடல் திசுக்களைப் போன்ற இந்த ‘ஹைட்ரோஜெல்’ நீரில் கரையாத தன்மை கொண்டது.
மனித உடலிலிருந்து அகற்றப்பட்ட கட்டிகளின் உயிரணுக்கள் சில மணி நேரங்களில் அல்லது ஓரிரு நாள்களில் சிதைந்துவிடக்கூடியவை. அவற்றில் மருந்துகளைப் பரிசோதிக்கவும் உயிரணு நிலையிலான சில ஆய்வுகளை மேற்கொள்ளவும் கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
தலை அல்லது கழுத்துப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் கட்டிகளிலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்களை, புதிய ‘ஹைட்ரோஜெல்’ மூலம் பாதுகாப்பதில் வெற்றிபெற்றதாக ஆய்வாளர்கள் கூறினர்.
அடிவயிறு, நுரையீரல், மலக்குடல், சினைப்பை போன்றவற்றில் ஏற்பட்ட புற்றுநோய்க் கட்டிகளைக் கொண்டும் பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் ஜனவரி 20ஆம் தேதி ‘பயோமெட்டீரியல்ஸ்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் மட்டுமன்றி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சிகிச்சைமுறையைப் பரிசோதிக்கவும் புதிய ‘ஹைட்ரோஜெல்’ உதவும் என்பதை மருத்துவ வல்லுநர்கள் சுட்டினர்.
அகற்றப்பட்ட கட்டிகளில் மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் நோயாளிக்கு அடுத்தகட்ட சிகிச்சைமுறையைத் துல்லியமாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
புற்றுநோயைக் குணப்படுத்துவது என்பது நீண்டகால இலக்கு என்றபோதிலும் தனிப்பட்ட, துல்லியமான சிகிச்சைமுறைக்கு உதவும் இந்தக் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் புற்று நோயை ஒரு நாட்பட்ட நோயாகக் கையாளும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.