கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவைகள் அதிகமாக இருந்ததால் வாடகை ஏறுமுகமாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவருகிறது.
தற்போது பல கூட்டுரிமை வீடுகளும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் கட்டட வேலைகள் முடிந்து சொத்து சந்தைக்கு வந்துள்ளளன, இதனால் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை குறைந்துள்ளது. அதனால் அவற்றின் வாடகை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
“சில வீடுகள் பல நாள்களாக காலியாக இருக்கும் சூழ்நிலையும் எழுந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு வீடுகள் இருப்பதாக விளம்பரம் செய்தால் ஓரிரு நாள்களில் வீட்டிற்கு ஆள் கிடைத்துவிடும் ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை,” என்று சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.
2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வீட்டு வாடகை விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக நகரச் சீரமைப்பு ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டின் பிற்பாதியில் இருந்தே வாடகை வீழ்ச்சி தொடங்கிவிட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் பலர் அவர்களின் சொந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டனர், தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகள் தயாராகிவிட்டதால் சிங்கப்பூரர்களும் வாடகை வீடுகளில் இருந்து சொந்த வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் சொத்து சந்தையில் தேவையைவிட அதிகமான வீடுகள் உள்ளதால் வாடகை கீழ் நோக்கிச் செல்கிறது என்று பிராப்நெக்ஸ் சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.
வீடுகளுக்காக வாங்கிய வங்கிக் கடனை மாதம் மாதம் கட்ட வேண்டும் என்பதால் வாடகை விலை குறைந்தாலும் சரி என்று வீடுகளை வாடகைக்கு விடும் போக்கு உரிமையாளர்களிடம் அதிகரித்துள்ளதாக சொத்து முகவர்கள் குறிப்பிட்டனர்.
வீடுகள் காலியாக இருப்பதைத் தவிர்க்க சில உரிமையாளர்கள் குறைந்த கால வீட்டு வாடகை ஒப்பந்தத்தையும் மேற்கொள்கின்றனர்.
வீட்டு கடனுக்கான வட்டி வகிதமும் அதிகரித்து வருவதால் வீட்டு உரிமையாளர்கள் செய்வதறியாது நிற்பதாக சொத்து முகவர்கள் கவலைத் தெரிவித்தனர்.