வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி அட்டைக்கான (எம்பிளாய்மெண்ட் பாஸ்) குறைந்தபட்ச சம்பளம் 5,600 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிதாக வேலை அனுமதி அட்டைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும். நிதித்துறையில் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி அட்டையின் குறைந்தபட்ச சம்பளம் 6,200 வெள்ளியாக மாற்றம் காண்கிறது.
வேலை அனுமதி அட்டையின் சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் சிங்கப்பூரில் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்த முடியும். அதனால் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் புத்தாக்க திறமையும் வளரும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது வேலை அனுமதி அட்டைக்கான குறைந்தபட்ச சம்பளம் 5,000 வெள்ளியாக உள்ளது. நிதித்துறையில் உள்ளவர்களுக்கு அது 5,500 வெள்ளியாக இருக்கிறது.
வேலை அனுமதி அட்டைக்கான குறைந்தபட்ச சம்பளம் ஊழியரின் வயதைப் பொருத்தும் மாறும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கட்கிழமை (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை அனுமதி அட்டை பெற வேண்டும் என்றால் அவரின் குறைந்தபட்ச ஊதியம் 10,700 வெள்ளியாக இருக்கும். நிதித்துறை என்றால் அது 11,800 வெள்ளியாக இருக்கும்.
வேலை அனுமதி அட்டைக்கான சம்பளம் குறித்து ஆண்டுக்கு ஆண்டு மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல் முறை வேலை அனுமதி அட்டை விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். அதன் பின்னர் புதுப்பிப்பு செய்யும் போது மூன்று ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும்.
சம்பள மாற்றம் குறித்து வர்த்தக நிறுவனங்கள், சம்மேளனங்களுடன் பேசியதாகவும் மனிதவளத்திற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் என்று அவை அக்கறைத் தெரிவித்ததால் அடுத்த ஆண்டு தொடக்கம் புது விண்ணப்பங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததாக அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு எஸ் பாஸ் சம்பளத்திலும் தீர்வையிலும் எந்த மாற்றமும் இல்லை.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வேலை அனுமதி அட்டைக்கான விண்ணப்பங்கள் ‘காம்பஸ்’ என்னும் செயல்முறைக்கு கீழ் தான் வழங்கப்படுகிறது.