மார்ச் பள்ளி விடுமுறையின்போது உட்லண்டஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மார்ச் 4ஆம் தேதியன்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
மார்ச் 8ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை இரு சோதனைச்சாவடிகள் வழியாகப் பல வாகனங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.
இரு சோதனைச்சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தை உறுதி செய்த பிறகு, பயணம் மேற்கொள்ளுமாறு வாகன ஓட்டுநர்களுக்கு ஆணையம் அறிவுறுத்துகிறது.
அதுமட்டுமல்லாது, சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் செல்லாமல் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு செல்ல முற்பட்டால் போக்குவரத்து நெரிசல் மோசமாகும் என்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
அவ்வாறு செய்பவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு மீண்டும் வரிசையில் இணைய வைக்கப்படுவர்.