மெல்பர்ன்: உலகப் புகழ்பெற்ற ‘பாப்’ பாடகியான டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது, அண்டை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் அது வெற்றிகரமான ஏற்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் கண்ணோட்டத்தில் பொருளியல் வளர்ச்சிக்கு மட்டும் இது பங்காற்றவில்லை. இவ்வட்டாரத்திலிருந்து பார்வையாளர்களையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வருகிறது. அதோடு பரஸ்பர அணுகூலங்களுக்கு இதைத்தான் செய்ய வேண்டும் என்றால் நாம் ஏன் அதைச் செய்யக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
திரு லீ தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.
மார்ச் 5ஆம் தேதி சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா வருடாந்திர தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சிங்கப்பூருக்கான அந்தப் பிரத்தியேக இசை நிகழ்ச்சி ஒப்பந்தம், ஆசியான் நாடுகளுக்கு இடையி லான ஒத்துழைப்பை கீழறுப்பதாக இருக்கிறது என்று விமர்சிக்கப்படுவதற்கு பிரதமர் லீ விளக்கமளித்தார்.
“ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அது, மிகவும் வெற்றிகரமான ஏற்பாடாகவும் மாறியுள்ளது. இந்தப் பிரத்தியேக ஏற்பாட்டை மற்ற நாடுகளுக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. சில சமயங்களில் சில நாடுகள் ஒப்பந்தம் செய்யும். சில சமயங்களில் மற்ற நாடுகள் ஒப்பந்தங்களை செய்யும்,” என்றார் அவர்.
கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு இசைத் துறையை மீட்கும்விதமாக சுவிஃப்ட் நிகழ்ச்சிக்கு பயணத்துறை மேம்பாட்டு நிதியிலிருந்து ஊக்குவிப்பு வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“இசை நிகழ்ச்சிக்கு அத்தகைய ஏற்பாட்டை நாம் செய்யாவிட்டால் அவர் வேறு ஏதாவது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்வாரா, மாட்டாரா என்பது தெரியாது. இதனை அவர்தான் முடிவு செய்ய முடியும்,” என்று பிரதமர் லீ மேலும் கூறினார்.
சென்ற பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவில் அந்தப் பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதை அவர் நினைவுகூர்ந்தார்.
டெய்லர் சுவிஃப்ட்டின் மாபெரும் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் மார்ச் 2,3,4 மற்றும் மார்ச் 7,8.9 தேதிகளில் நடைபெறுகிறது.