சிங்கப்பூருக்கு எது நல்லதோ, அதையே நாங்கள் செய்கிறோம் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி விவகாரம் குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தில் பாட்டளிக் கட்சி உறுப்பினரான ஜேமஸ் லிம், முதலில் நிகழ்வுகளைக் கைப்பற்றும் சிங்கப்பூரின் நடவடிக்கையால் வெளிநாட்டு உறவில் பாதகமான விளைவுகளை அது ஏற்படுத்துமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு ஆல்வின் டான், “சிங்கப்பூருக்கு சிறந்தவற்றை நாங்கள் செய்கிறோம், ஆனால் சிங்கப்பூர் ஒரு தொடர்பு மற்றும் துடிப்பான மையமாக இருப்பதால் நமது வட்டாரத்திற்கும் நமது அண்டை நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்,” என்று கூறினார்.
இவ்வட்டாரத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பார்வையாளர்கள் பயணம் செய்வதால் ஒருங்கிணைந்த நன்மைகள் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இசை நிகழ்ச்சிகளை நடத்த அமெரிக்க பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்சை சிங்கப்பூர் கொண்டு வருவதற்காக ஏஇஜி பிரிசன்ட்ஸ் எனும் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மானியம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
கழகம், 1998ஆம் ஆண்டிலிருந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மானியங்கள் வழங்கி வருவதை திரு டான் சுட்டிக்காட்டினார்.
கழகம் ஆதரிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மொத்தம் பங்கேற்பவர்களில் 25 முதல் 30 விழுக்காடு வெளிநாட்டுப் பார்வையாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.