குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாலர் பள்ளிகளில் சேர கூடுதல் ஆதரவு வழங்க, பள்ளிக் கட்டணத்தில் வரம்பு கொண்டு வரப்பட உள்ளது.
2025ஆம் ஆண்டு, குறைந்த பள்ளிக்கட்டண வரம்பு அறிமுகம் ஆக உள்ளது. அதேநேரம், இவ்வாண்டு இரண்டாம் பாதியில் இருந்து குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும்.
மேலும், அத்தகைய குடும்பங்கள் மூன்று வயதில் குழந்தைகளை பாலர் பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிப்பதற்கான ஈடுபாட்டு முயற்சிகள் விரிவடையும்.
குறைந்த வருமானக் குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கட்டுப்படியாகக்கூடிய பாலர் பள்ளிக் கல்வியை வழங்குவது அந்தக் குழந்தைகளுக்கு வலுவான ஒரு தொடக்கத்தையும் அடுத்த பள்ளிப் பருவத்திற்கு சிறந்த முறையில் தயாராவதையும் வழங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில், முழுநேர குழந்தைப் பராமரிப்புக்கான மாதக் கட்டண வரம்பு $40 குறைந்து $640 ஆகும். இது ஐந்து முதன்மை நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
அதேபோல, 28 பங்காளித்துவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கான கட்டண வரம்பு $680 ஆக இருக்கும்.
இந்தக் கட்டணத்தில், நடப்பில் உள்ள சலுகைகளைக் கழித்த பின்னர், பெரும்பாலான குடும்பங்கள் குழந்தைப் பராமரிப்புக்காக மாதம் $3க்கும் $441க்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்தும்.
இதன் மூலம் 95,000 குழந்தைகள் பலனடைவார்கள் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தெரிவித்தார்.