ஆண் ஆசிரியர் ஒருவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது கூட்டுரிமை வீட்டில் தமது நண்பரின் 12 வயது மகளை மானபங்கம் செய்திருந்தார்.
சம்பவம் நடந்தபோது, அந்த ஆடவர் சிறுமியின் அண்டைவீட்டாராக இருந்தார். அவர் அந்தச் சிறுமியின் பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
அந்தச் சிறுமியை மானபங்கம் செய்ததற்காக, 41 வயதான அந்த வெளிநாட்டவருக்கு மார்ச் 6ஆம் தேதி ஓராண்டு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க குற்றவாளி, அவரது இல்லம், அவர் பணிபுரிந்த பள்ளி ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அவரின் குடியுரிமையையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிடவில்லை. அவ்வாறு செய்தால், அந்த ஆடவரின் அடையாளம் வெளிச்சத்துக்கு வந்து, அதனால் அந்த சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்பதே அதற்குக் காரணம்.
ஆடவர் இன்னும் ஆசிரியராக இருக்கிறாரா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முன்னதாக அவர் வேலையிலிருந்து தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பதினான்கு வயதுக்குக் குறைவான பிள்ளையை மானபங்கம் செய்பவருக்கு, ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எதுவும் விதிக்கப்படலாம்.