தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு இல்லாமல் செல்ல மூவருக்கு உதவியதாக ஆடவர்கள் இருவர் மீது மார்ச் 6ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
பாதுகாவல் அதிகாரியின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் சீன நாட்டவரான 29 வயது யாங் செங்குவாங் அவரிடம் பேச்சு கொடுத்ததாக அறியப்படுகிறது.
அப்போது இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் நுழைய 45 வயது லீ சியாவ் வெய் நுழைவுச்சீட்டு இல்லாத மூவருக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
லீ சியாவ் வெய்யும் சீனாவைச் சேர்ந்தவர்.
நுழைவுச்சீட்டு இல்லாமல் இசைநிகழ்ச்சிக்குச் சென்று இசைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரை ஏமாற்றியதாக ஷாங்குவாங் லின்மோ, ஹு ஸிஜின், யாங் ஜுன்ஹாவ் ஆகிய மூவரின் பெயர்கள் குற்றப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஐந்து பேரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $1,500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.