மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் 12 நாள்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனிடம் அவரது மருத்துவர் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சிங்கப்பூரின் தலைமைச் சட்ட அதிகாரி அதிகாரியின் அலுவலகத்துடன் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் தொடர்புகொண்டது.
அப்போது பதில் அளித்த அந்த அலுவலகம், மேல்விவரங்கள் அரசுத்தரப்புக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாகச் சொன்னது.
“மருத்துவமனையில் இருந்து மார்ச் 5ஆம் தேதி ஈஸ்வரன் வீடு திரும்பியதாக அரசுத்தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“மேலும், வீடு திரும்பியதில் இருந்து 12 நாள்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ஈஸ்வரனுக்கு அவரது மருத்துவர் ஆலோசனை தெரிவித்து உள்ளார்,” என்று அலுவலகப் பேச்சாளர் கூறினார்.
மூச்சுத்திணறல் காரணமாக மெல்பர்னில் உள்ள கேப்ரினி மல்வெர்ன் என்னும் தனியார் மருத்துவமனையில் எஸ் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர், அவர் வீடு திரும்பியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
அந்த மருத்துவமனை தென்கிழக்கு மெல்பர்னில் அமைந்துள்ளது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஈஸ்வரன் $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவரது மகனை மெல்பர்ன் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்க அவர் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தார்.