சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
“மோசடிப் பேர்வழிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சுங்கத்துறையின் தலைமை இயக்குநரான டான் ஹங் ஹூய் அல்லது அத்துறையின் மூத்த அதிகாரிகள் அனுப்புவது போல மக்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர்,” என மார்ச் 4ஆம் தேதி சுங்கத்துறை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
“இதுபோன்ற மின்னஞ்சல்கள் எதுவும் சுங்கத்துறை அதிகாரிகளால் அனுப்பப்படவில்லை. சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் போல் தங்களை அடையாளப்படுத்திகொண்டு, மோசடிகளில் ஈடுபடுபவர்களிடம் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என மேலும் அந்தப் பதிவில் சுங்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
சுங்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வ கடிதங்களை ஜிமெயில், யாகூ போன்ற தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் அல்லது பிற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பமாட்டார்கள் என்றும் அது கூறியது.
“@customs.gov.sg” என முடிவடையும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளில் மட்டுமே சுங்கத்துறை பொதுமக்களைத் தொடர்புகொள்ளும் என அது குறிப்பிட்டது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், customs_feedback@customs.gov.sg என்ற முகவரியைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களை அது கேட்டுகொண்டது.