45 அர்மீனியன் ஸ்திரீட்டில் உள்ள 14,000 சதுர அடி கட்டடத்தில் கலைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி மறுமேம்பாடு செய்வதற்கான பணிகள் 2026ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘த சப்ஸ்டேஷன்’ என்று முன்னர் அழைக்கப்பட்டது அந்தக் கட்டடம்.
அதேபோல, கம்போங் ஜாவாவில் எண் 52 முதல் 56 வரை உள்ள ஐந்து ஈரடுக்குக் கட்டடங்களில் கட்டுப்படியாகக்கூடிய ஸ்டூடியோ தளத்தை கலைஞர்களின் பயன்பாட்டுக்கு நிறுவும் பணிகளை இவ்வாண்டின் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் லோ யென் லிங் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தமது அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
இங்குள்ள கலைகளுக்கான சமூகம் வளரும்போது அந்தக் கலைகள் அரங்கேறுவதற்குப் போதுமான இடங்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றார் அவர்.
மேலும், கில்மன் பராக்ஸ் என்னும் முந்தைய ராணுவ குடியிருப்பு வளாகம் வீடமைப்புக்குத் தோதான இடம் என்று கூறிய அவர், அந்த வளாகத்தில் வாடகைக் குத்தகையில் இருந்து வரும் 10க்கும் மேற்பட்ட கலைக்கூடங்கள் அவற்றின் குத்தகைக் காலம் முடியும் வரை அங்கிருக்க அனுமதிக்கப்படும் என்றார்.
அந்தக் கலைக்கூடம் ஒவ்வொன்றின் குத்தகைக் காலமும் 2030ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் காலாவதியாகும்.
தொடர்ந்து அவை அங்கு இருக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்து மரபுடைமை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடத்தி ஆராய்ந்த பின்னர் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆய்வுகளை 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் உஷா சந்திரதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது இந்த விவரங்களை திருவாட்டி லோ வெளியிட்டார்.

