வெவ்வேறு கருத்துகள் உள்ளோருக்கு இடம் தந்து அவர்களது சொற்களுக்கு மதிப்பளித்து அதே நேரத்தில் பொதுவான நோக்கத்துடன் அனைவரையும் முன்னேற்றும் பணி, அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் சவாலாக உள்ளது என்று தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார அமைச்சுக்களின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
“முன்வைக்கப்படும் எல்லா யோசனைகளுமே நடைமுறை ஆவதில்லை. ஆனாலும் எல்லாத் தரப்பினரின் யோசனைகளுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். எல்லாவித கருத்துகளுக்கும் மதிப்புண்டு என்பது பேச்சளவில் மட்டும் இருக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஜனில்.
இந்திய நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த தொண்டூழியர்களுடன் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலின் தொடக்க உரையில் டாக்டர் ஜனில் இவ்வாறு கூறினார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் கழகத்தின் தலைமையகத்தில் புதன்கிழமையன்று (மார்ச் 6) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த சுமார் 200 அடித்தளத் தலைவர்களும் இந்திய அமைப்பினரும் பங்குபெற்றனர்.
சிங்கப்பூரில் சிறிய சமூகமாக உள்ள இந்தியச் சமூகத்தில் பெரிய அளவிலான பன்முகத்தன்மை இருப்பதாகவும் அதனை நம் மொழிகளிலும் கருத்துகளிலும் காணலாம் என்றும் டாக்டர் ஜனில் கூறினார்.
“நற்பணிப் பேரவை, இந்திய நற்பணிச் செயற்குழுக்கள் உள்ளிட்ட பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்த அடித்தளத் தலைவர்களாக நீங்கள் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்றாகவும் இந்தப் பன்முகத்தன்மை உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
பன்முகத்தன்மையிலும் ஒற்றுமை காண்பது குறித்து வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பாகச் சொல்லப்படவில்லை என்றாலும் மக்கள் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அத்திட்டம் விவரிப்பதாக டாக்டர் ஜனில் கூறினார். “பணவீக்கம், உயரும் உணவு விலை, மனிதவளச் சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள தனிநபர்கள், குடும்பங்கள், வர்த்தகங்கள் ஆகியோருக்கு வரவுசெலவுத் திட்டங்கள் உதவுகின்றன,” என அவர் குறிப்பிட்டார்.
மத்திய சேமநிதி சிறப்புக் கணக்கின் நீக்கம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம், மூத்த ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். டாக்டர் ஜனிலுடன் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை பதிலளித்தார். உணவுச் செலவைக் குறைக்க விரும்புவோருக்காக ‘சிடிசிவவ்சர்ஸ்கோவேர்’ (CDCVouchersGoWhere), ‘பட்ஜெட்மீல்கோவேர்’ (BudgetmealGoWhere) போன்ற சேவைகளையும் அவர் பங்கேற்பாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.
உணவுக் கடை ஒன்றை நடத்தும் தம் தந்தையின் சார்பில் பேசிய தேசிய சேவையாளர் ஷேக் தாவூத், 22, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுத் தொகை கடைக்காரர்களைத் தாமதமாகச் சேர்வதாகக் கூறினார். ‘சிடிசி’ முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ள அனைத்துத் தரப்பினருக்கும் காலம் எடுக்கும் என்று கலந்துரையாடலின் மூலம் புரிந்துகொண்டதாக திரு ஷேக் கூறினார்.