சிங்டெல் நிறுவனம், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 49 மில்லியனை அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிகியூஜி பார்ட்னர்சிடம் விற்றுவிட்டதாக மார்ச் 7ஆம் தேதி தெரிவித்தது.
இது, ஏர்டெலின் பங்கில் 0.8 விழுக்காடாகும். ஒரு பங்கிற்கு ரூ.1,193.70 என விலையில் பங்குகள் விற்பனையாகின.
இதன்மூலம் ஏறக்குறைய $950 மில்லியன் பெறப்பட்டுள்ளதாக சிங்டெல் கணிக்கிறது.
இந்தப் பரிவர்த்தனையின் மூலம் ஏறக்குறைய $700 மில்லியன் லாபம் கிடைக்கும் என அது எதிர்பார்க்கிறது. இந்திய தேசிய பங்குச் சந்தையில் இந்தப் பரிவர்த்தனை இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது.
பங்குகளின் விற்பனைக்குப் பிறகு, ஏர்டெலில் சிங்டெலின் பங்கு 29.8 விழுக்காட்டில் இருந்து 29 விழுக்காடாகக் குறையும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த மூன்றாம் காலாண்டுக்கான சிங்டெலின் பிப்ரவரி 2024 வர்த்தக அறிவிப்பின்படி, காலாண்டுக்கான ஏர்டெலின் வரிக்கு முந்தைய பங்களிப்புகள் ஆண்டு அடிப்படையில் 15.9 விழுக்காடு குறைவாக, $177 மில்லியனாக இருந்தது.
சிங்டெலின் காலாண்டுக்கான நிகர லாபம் 12.5 விழுக்காடு குறைந்து $465 மில்லியனாகப் பதிவானது. ஏர்டெல் தரப்பில் ஏற்பட்ட இழப்பே அதற்குக் காரணம்.
இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் செயல்பாட்டு லாபத்தில் ஏர்டெல் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்தாலும், அதன் மூன்றாம் காலாண்டுகான நிகர லாபம், ஆப்பிரிக்காவில் உள்ளூர் நாணயங்களின் மதிப்பு சரிந்ததால் குறைந்தது.
இந்நிலையில், ஏர்டெலிடம் வளர்ச்சிக்குக் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதை நாம் நம்புவதாக சிங்டெல் தலைமை நிதி அதிகாரி ஆர்தர் லாங் கூறினார்.