சிங்கப்பூரில் ஆகப் பெரிய அளவில் மின்சிகரெட் பொருள்கள் பறிமுதலான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு வியாழக்கிழமை (7 மார்ச்) மொத்தம் 17,000 வெள்ளி அபாரதம் விதிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட முறியடிப்பு நடவடிக்கையில் அந்த ஆடவர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மின்சிகரெட் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று செம்பவாங்கில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவர்கள் மின்சிகரெட் பொருள்களுடன் பிடிபட்டனர். அந்த இடத்திலிருந்து காவல்துறையினருக்குத் துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து அந்த ஆடவர்கள் பிடிபட்டனர்.
அதனையடுத்து சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மண்டாயில் உள்ள கிடங்கைச் சோதனையிட்டனர். அங்கு 85,000க்கும் அதிகமான மின்சிகரெட் பொருள்கள் காணப்பட்டன. அவற்றை விற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
குற்றவாளிகளில் ஒருவரான இயாவ் வெய் ஃபெங்கிற்கு 9,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. 23 வயது முகம்மது ஹெய்லி முய்ஸாம் எனும் மற்றொரு குற்றவாளிக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.