கொள்ளைநோய்க்குப் பிந்திய உலகம் ஆபத்தானது மட்டுமல்ல, கணிக்க முடியாததாக உள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் $131.4 பில்லியன் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளதால் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியலைத் துடிப்புடன் வைத்திருப்பது, செலவினங்களைச் சமாளிக்க உதவுவது போன்றவற்றுக்கான விரிவானத் திட்டங்களை சுட்டிக்காட்டி மன்றத்தில் பேசிய அவைத் தலைவர் இந்திராணி ராஜா, 2024ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம், ‘முன்னேறு சிங்கப்பூர்’ அறிக்கையில் உள்ள திட்டங்களுக்கு உயிர்கொடுக்கிறது என்றார்.
“சிங்கப்பூரர்களாகிய நாம் அனைவரும் எதிர்காலத்தை ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம்,” என்று அவர் கூறினார்.
மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு எம்பிக்களும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று நாடாளுமன்ற நாயகரான சியா கியன் பெங் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஒன்பது நாள் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் வியாழக்கிழமை (மார்ச் 7) அன்று நிறைவுபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருள் சேவை வரி உயர்வை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
ஆனால் இம்முறை அவர்கள் தங்களுடைய ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிய குமாரி இந்திராணி ராஜா, 2020ஆம் ஆண்டின் ஐந்து வரவு செலவுத் திட்டங்கள் உட்பட 2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான முந்தைய வரவு செலவுத் திட்டங்கள் கொள்ளைநோயைக் கடக்க சிங்கப்பூருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவை என்றார்.
“சிங்கப்பூர் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது. ஆனால் காஸா மற்றும் உக்ரேன் மோதல்கள், புவிசார் அரசியல் போட்டாபோட்டி, தனிப்பட்ட முறையில் வாழ்க்கைச் செலவினம் பற்றிய சிங்கப்பூரர்களின் கவலை, பணவீக்க அழுத்தம் உள்ளிட்ட மாறுபட்ட உலகில் சிங்கப்பூர் நுழைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இதன் பின்னணியில் 2024ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் சிங்கப்பூரை எதிர்காலத்தில் நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்வதற்கான தெளிவானத் திட்டங்களை வழங்குகிறது என்றார்.
2024ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய உதவித் திட்டங்களை அவர் நினைவுப்படுத்தினார்.
அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதலான சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச் சீட்டுகள், தாராளமான வர்த்தக வரிச் சலுகை, சிங்கப்பூரர் ஊழியர் அணியில் நம்பிக்கையை வளர்க்கும் பணியிடைக்கால ஊழியர்களுக்கான மேம்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்கள், பிற்கால வயதிலும் வழிகாட்டும் திட்டங்கள் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார்.
குடும்பங்கள் சமூகத்தின் அடித்தளம் என்ற இரண்டாம் நிதி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா, குறைந்த அளவு பாலர் பள்ளிக் கட்டணம், அதிக முதியோர் பராமரிப்பு வாய்ப்புகள், ஓய்வுக்காலத்திற்கு போதுமான நிதி போன்றவற்றின் மூலம் இளம் வயதினர் முதல் முதியவர் வரை அரசாங்கம் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
காம்லிங்க்+ மற்றும் சட்ட உதவியை விரிவுபடுத்துவது போன்ற பிற நடவடிக்கைகள் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளித்து சிங்கப்பூர் சமூகத்தை வலுப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் யாரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்கிறது என்று திருவாட்டி இந்திராணி ராஜா தெரிவித்தார்.