சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
எனினும், அவை அதிக வளர்ச்சி காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களைத் தூக்கிவிட ஓசிபிசி வங்கி புதிய திட்டம் ஒன்றைத் தொடங்குகிறது.
அத்திட்டத்தின்கீழ், பெண் தொழில்முனைவர்கள் நிறுவனம் தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகளில் 100,000 வெள்ளி வரை கடனாகப் பெறமுடியும். அந்தக் கடனுக்கென செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது.
திட்டத்தில் பங்கேற்போர் பயிலரங்குகளில் கலந்துகொள்ளலாம். அதோடு, அவர்கள் தொழில் தொடர்பில் முக்கிய நபர்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் இருக்கும்.
திட்டத்தால் பயன்பெறும் தொழில்முனைவர்கள், அதில் சேரும் மற்றவர்களை வழிநடத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
புதிய ஓசிபிசி பெண் தொழில்முனைவர் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். சிங்கப்பூர் வங்கி ஒன்று பிரத்தியேகமாகப் பெண் தொழில்முனைவர்களுக்கென நடத்தும் முதல் திட்டம் இது என்று வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில் ஓசிபிசி தெரிவித்தது.
திட்டத்தின் மூலம் ஓசிபிசி வங்கியுடன் இணைந்து செயல்படும் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பலனடைவயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்கள், அந்த வங்கியுடன் இணைந்து செயல்படும் 100,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 25 விழுக்காடாகும்.