ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா உட்பட பத்துப் பேர் புகழ்மிக்க சிங்கப்பூர் பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்பட்டியலில் 192 பெண்கள்இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சாந்தி பெரேரா உள்ளிட்ட இந்த பத்துப் பெண்களும் அடங்குவர். அப்பெண்களின் சாதனைகளும் அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்கும் இதன்மூலம் சிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாண்டு புகழ்மிக்க சிங்கப்பூர் பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோரில் சாந்திதான் ஆக இளையவர்.
“சில ஆண்டுகளுக்கு முன்புதான் சாந்தி, தொடக்கத்தில் எழுந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய முடியாதவர் என்று சிலரால் தூற்றப்பட்டார்; அந்த வகையில் அவரின் சாதனைகள் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை,” என்று சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் (எஸ்சிடபிள்யுஓ) அதன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன் பிறகு பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமை சாந்தியைச் சேரும்.
சென்ற ஆண்டு மே மாதம் கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளின் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் இரண்டிலும் சாந்தி வாகை சூடினார். தென்கிழக்காசிய விளையாட்டுகளில் அவ்விரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூர் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய ஓட்டப் பந்தயப் போட்டிகளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் சாந்தி.
சிங்கிலிஷ் எனப்படும் சிங்கை மணம் கலந்த ஆங்கில மொழியில் படைப்புகளை வழங்கியிருக்கும் எழுத்தாளர் சில்வியா டோ பெய்க் சூ, உலகின் ஆக உயரமான மலைகளான கே2, எவரெஸ்ட் ஆகியவற்றின் சிகரங்களை அடைந்த முதல் சிங்கப்பூரர்கள் என்ற பெருமையைப் பெற்ற சிம் ஃபெய் சுன் மற்றும் வின்சியர் ஸெங் உள்ளிட்டோரும் இவ்வாண்டு சிங்கப்பூரின் புகழ்மிக்க பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.