‘மாஃபியா’ கருப்பொருளில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘கொத்தி இத்தாலியானோ’ என்ற இத்தாலிய உணவகம் ஏற்பாடு செய்ததை சிங்கப்பூருக்கான இத்தாலியத் தூதர் விமர்சித்ததை அடுத்து, உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.
சைனாடவுனில் உள்ள அமோய் ஸ்திரீட் பகுதியில் உள்ள இந்த உணவகம், மார்ச் 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சி குறித்து முன்னதாகவே ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டது.
இந்நிலையில், ‘மாஃபியா’ என்பது இத்தாலி பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல என்று தூதர் டான்டே பிராண்டி ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டிருந்தார்.
“மக்களின் இறப்புக்கும் தவிப்புக்கும் அது காரணமாக இருந்துள்ளது. அதைவிட முக்கியமாக, இன்னமும் மக்கள் அதற்கு எதிராகப் போரிடுவதில் இறக்கின்றனர், தவிக்கின்றனர்,” என்றார் திரு பிராண்டி.
“இழிந்தவரெனப் பெயர் எடுத்த சட்டவிரோதக் குடும்பத்தின் பெயரை வைத்திருப்பதும் வாடிக்கையாளர்களை மாஃபியா கருப்பொருள் கொண்ட இரவுநேர நிகழ்ச்சிவழி ஈர்ப்பதும் நிச்சயம் சட்டவிரோதமல்ல. ஆனால், இது சந்தேகத்திற்குரிய ரசனையைக் காட்டுகிறது என்பது உறுதி,” என்றார் திரு பிராண்டி.
பொதுவாக ‘கொத்தி’ என்ற பெயர், அமெரிக்காவில் குற்றம் இழைக்கும் மோசமான நபரான ஜான் கொத்தி என்பவருடன் தொடர்புபடுத்தப்படும்.
திரு பிராண்டியின் பதிவின்கீழ் கருத்து பதிவிட்ட உணவகம், புண்படுத்தும் வகையில் அமைந்த தனது செயலுக்கு மன்னிப்பு கோரியது.