சிங்கப்பூரர்கள், பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வதை விரும்புவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், குடும்ப வாழ்க்கையின் இதர விழுமியங்கள் பூர்த்தியாகாவிட்டால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
சிங்கப்பூர் உட்பட எட்டு நாடுகளில், டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மொத்தம் 22,000க்கும் மேற்பட்டோர் கருத்துரைத்தனர்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்து ஆய்வாளர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர்.
சிங்கப்பூரிலிருந்து அதில் கலந்துகொண்ட ஏறக்குறைய 3,500 பேரில் மணமுடித்தோர், மணமாகாதோர் என இரு தரப்பினரும் அடங்குவர்.
சிங்கப்பூரர்களைப் போன்றே ஆய்வில் கலந்துகொண்ட மற்ற ஏழு நாட்டினரும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூரில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே அண்மைய ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
குடும்ப வருமானம், வேலை-வாழ்க்கைச் சமநிலை, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான தொடர்பு, பிள்ளைகளின் கல்வித் தகுதி குறித்த எதிர்பார்ப்புகள் போன்ற 10 அம்சங்களைக் கருத்தில்கொண்டு, கருத்தாய்வில் பங்கேற்றோருக்கு எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் என்று ஆய்வாளர்கள் கேட்டனர்.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான தொடர்பு, சமுதாயத்தில் குடும்பத்துக்கான மரியாதை, தம்பதியர்க்கு இடையிலான ஆதரவு போன்ற அம்சங்களுக்கு எட்டு நாட்டினரும் முக்கியத்துவம் அளிப்பது ஆய்வில் தெரியவந்தது.
குடும்ப வருமானம் சராசரியைவிட அதிகமாக இருக்க வேண்டுமென்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இதர ஏழு நாட்டினரைவிட சிங்கப்பூரர்கள் மூன்று அம்சங்களில் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
திருமணத்தில் பாலினச் சமத்துவம், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, பிள்ளைகளின் பட்ட மேற்படிப்பு ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.
தம்பதியர் இருவரும் வேலை பார்க்கும் சூழலில், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டால் திருமணத்தில் பாலினச் சமத்துவத்திற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் தரவில்லை.
மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
பட்டம் பெற்றபின் பிள்ளைகள் மேற்கல்வி பயிலவேண்டும் என்று ஆய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர்.