சாங்கியில் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்த விபத்தில் மூன்று மாதப் பெண் குழந்தை, மூன்று வயது சிறுவன் ஆகியோர் உள்பட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பர் சாங்கி ரோடு நார்த் மற்றும் சாங்கி நார்த் ஸ்திரீட் 1 சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதாக காலை 10.05 மணியளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு சிறார்களுடன் வாகனத்தை ஓட்டிய 50 வயது ஆடவர், 40 வயது பெண் பயணி ஆகியோரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு மருத்துவ வண்டிகள் விபத்து நிகழ்ந்த இடத்தில் காணப்பட்டதாக ஷின் மின் செய்தி நிறுவனம் அறிந்து வந்தது.
பழுப்புநிற கார் ஒன்று நடைபாதை ஓரமாக ஏறி இருந்ததுடன் போக்குவரத்து விளக்கை மோதியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
வெள்ளிநிற கார் ஒன்று சாலை நடுவே காணப்பட்டது. அதன் முன்பகுதி மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.