சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றம், தேசிய பூங்காக் கழகத்துடனும் எம்டிசி அமைப்புடனும் இணைந்து சமூக மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
பாசிர் ரிஸ் பூங்காவில் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் இந்நிகழ்ச்சி வரும் புதன்கிழமை (மார்ச் 13) நடைபெறும். இருபது தொண்டூழியர்கள் கைகோக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் 70 மரங்கள் நடப்படும்.
இத்தகைய நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்வது சிண்டாவின் இளையர் பிரிவுக்கு இதுவே முதன்முறை. ஒரு மில்லியன் மரங்களுக்கான இயக்கத்தில் இந்நிகழ்ச்சி அங்கம் வகிக்கிறது. சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030ன் முக்கியத் தூணாக இந்த இயக்கம் திகழ்கிறது.
கற்றல் குறைபாடு உள்ளோரைத் தொண்டூழியம் மூலம் ஒருங்கிணைக்கும் முக்கியத்துவத்தை இளையர்களுக்குக் கற்பிப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றது சிண்டா. 2010ல் தொடங்கப்பட்ட சிண்டாவின் இளையர் மன்றத்தில் தற்போது 80 தொண்டூழியர்கள் இணைந்துள்ளனர்.