மலேசியாவின் சாபா மாநிலத்தில் மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த விபத்தில், 60 வயது சிங்கப்பூரர் உயிரிழந்துவிட்டார்.
அவர் பயணம் செய்துகொண்டிருந்த சுற்றுலா வேன், டிரெய்லர் ஒன்றோடு மோதியதாகக் கூறப்படுகிறது.
சாபாவின் செம்பூர்ணா மாவட்டத்தில் ஜாலான் செம்பூர்ணா-தவாவ் பகுதியருகே வேன் சென்றபோது விபத்து நேர்த்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து பிற்பகல் 4.03 மணிக்குத் தகவல் அறிந்ததாகக் குறிப்பிட்ட சாபா தீயணைப்பு, மீட்புப் பிரிவின் உதவிக் கண்காணிப்பாளர் ரிக்கி ராம்டே, சம்பவ இடத்திற்கு அவசரச் சேவை ஆதரவுப் பிரிவைச் சேர்ந்த குழு ஒன்று அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
விபத்தில் 40 வயது வியட்நாம் நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.
வேனில் இருந்த 11 வயது சிறுமி உள்பட நான்கு சிங்கப்பூரர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக திரு ரிக்கி கூறினார்.
மூளையில் ரத்தக்கசிவு, முழங்கை எலும்பு முறிவு போன்ற காயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வேன் ஓட்டுநருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, லாரி ஓட்டுநர் காயங்களின்றி தப்பியதாகக் கூறப்படுகிறது.