என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம், ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கவிருக்கிறது.
பானங்கள், தின்பண்டங்கள் அடங்கிய 60,000க்கு மேற்பட்ட அன்பளிப்புப் பொட்டலங்களை ஃபேர்பிரைசின் 61 கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மார்ச் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நோன்பு துறக்கும் நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னும், பின்னும் அவர்கள் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
ஒவ்வோர் அன்பளிப்புப் பொட்டலத்திலும் பால், ‘ஐசோடானிக்’ திரவல் அல்லது குடிநீர், பேரீச்சம் பழங்கள் அல்லது மாட்டிறைச்சித் துண்டுகள் அல்லது பிஸ்கட்டுகள் இருக்கும். இவை கையிருப்பு தீரும்வரை மட்டுமே வழங்கப்படும்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம், 16வது ஆண்டாக இவ்வாறு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்குகிறது.
முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்காலத்தில் ஆதரவு தரக் கிடைத்த வாய்ப்பு இது என்று குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா கூறினார்.
மேலும், நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நடத்தப்படும் என்றும் அவற்றில் விழாக்கால அன்பளிப்புகள் விநியோகிக்கப்படும் என்றும் ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
முதல் நிகழ்ச்சி, ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிடோக் நார்த்தில் நடைபெறும். அதேநாளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை புக்கிட் பாத்தோக்கில் இரண்டாவது நிகழ்ச்சி நடைபெறும்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 300 ஹலால் உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும்.
விளையாட்டுகள், உணவு, பானங்களின் மாதிரிப் பொட்டலங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாக்காலப் பொருள்களுக்குச் சிறப்பு விலைக்கழிவுகளும் வழங்கப்படுவதாக ஃபேர்பிரைஸ் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிகள், சலுகைகள் குறித்த மேல்விவரங்களுக்கு ஃபேர்பிரைசின் இணையத்தளத்தை நாடலாம்.