ஆள்களைப் பணியில் அமர்த்தும் எண்ணம், சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைந்துள்ளது.
தொடர்புச் சேவைகளில் உள்ள நிறுவனங்களுக்கிடையே நிலவும் அவநம்பிக்கை அதிகரித்ததால் இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், நிதி, நிலச்சொத்து, எரிசக்தி, பயனீட்டுத் துறைகளில் நிகர ஆட்சேர்ப்பு கண்ணோட்டம் மேம்பட்டதால் சரிவை ஓரளவு குறைக்க முடிந்ததாக ‘மேன்பவர்குரூப்’ நிறுவனத்தின் அண்மைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நிகர ஆட்சேர்ப்பு கண்ணோட்டம் என்பது, ஆட்களைப் பணியில் அமர்த்துவதில் உள்ள நம்பிக்கைக் குறியீடாகும். ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் புது ஊழியர்களை நியமிக்க எண்ணியுள்ள நிறுவனங்களின் விழுக்காட்டிலிருந்து ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடும் நிறுவனங்களின் விழுக்காடு கழிக்கப்படுவதை இந்த நிகர ஆள்சேர்ப்பு கண்ணோட்டம் குறிக்கும்.
தொடர்புச் சேவைகள் துறையில் உள்ள நிறுவனங்களில் அதிகமானவை, ஆள்களைச் சேர்ப்பதைக் காட்டிலும் குறைக்க எண்ணியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற ஒன்பது துறைகளில் இத்துறை மட்டுமே எதிர்மறை விகிதத்தைக் கொண்டிருந்தது.
ஆய்வில் 525 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒட்டுமொத்தமாக 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர ஆட்சேர்ப்பு கண்ணோட்ட விகிதம் 24ஆகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக 41% நிறுவனங்கள் ஆய்வில் தெரிவித்திருந்தன.
ஊழியர் எண்ணிக்கை குறையும் என்று 17% நிறுவனங்களும் ஊழியர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்த எண்ணமில்லை என்று 42% நிறுவனங்களும் கூறியிருந்தன.