முதலாளியிடமிருந்து 3.67 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்த மாதுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நொடித்துப் போனதால் தான் நொடித்துப் போனவர், பொது அறங்காவலர் அலுவலகத்துக்குக் கட்டணம் செலுத்துவதற்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி லின் ஷார்லட் ஜேம்ஸ் என்பவர் தனது முதலாளியை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2017ஆம் அண்டு அக்டோபர் மாதம் வரை அவர் தனது முதலாளியை 2,253 முறை ஏமாற்றினார்.
லின்னுக்கு உதவி வாழ்நாள் சேமிப்பையே இழந்த முதலாளி, தற்போது தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். லின்னுக்கு உதவ அத்தம்பதி தங்களின் சொத்துகளில் இரண்டை விற்கவும் செய்தனர்.
பாதிக்கப்பட்ட முதலாளியின் பெயர் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டது.
47 வயது லின், தான் பறித்த தொகையை அறவே திரும்பித் தரவில்லை. ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். புதன்கிழமையன்று (மார்ச் 13) அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மனைவுளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட முதலாளிக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாக மாவட்ட நீதிபதி ஷான் ஹோ கூறினார். முதலாளிக்குப் புற்றுநோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலாளியின் மனைவி மனநல சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக நீதிபதி கூறினார். ஆனால் சிகிச்சையைத் தொடர அவரிடம் போதுமான வசதி இல்லாததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தம்பதியின் மகள், தனது கைகளில் சுயமாக வெட்டிக்கொண்டார் என்றும் நீதிபதி சொன்னார். ஆனால் அச்செயல் இந்த வழக்கிற்குத் தொடர்புடையதா என்று அவர் குறிப்பிடவில்லை.