புதிய உணவு வகைகளுடன் கம்போங் கிளாம் ரமலான் சந்தை

புதிய உணவு வகைகளுடன் கம்போங் கிளாம் ரமலான் சந்தை

2 mins read
3d89c61a-3db8-46f6-aa31-b6f0c7c0dd67
ரமலான் சந்தையில் உணவுகளைச் சுவைக்க மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2
Google News Preferred Icon

புனித ரமலான் மாதத்தையொட்டி தீவு முழுவதும் பல இடங்களில் ரமலான் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாகச் செயல்படும் கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் இவ்வாண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மாதத் தொடக்கத்திலிருந்து அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை இச்சந்தை செயல்படும்.

அன்றாடம் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தை திறந்திருக்கும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு கம்போங் கிளாம் சந்தையில் வகை வகையான உணவுக் கடைகள் காணப்படுகின்றன.

100க்கும் மேற்பட்ட உணவு, பானக் கடைகள், துணிக் கடைகள் சந்தையில் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 80 கடைகள் உணவு வகைகளை விற்பவை. கந்தஹார் சாலை, மஸ்கட் சாலை, பாக்தாத் சாலை ஆகிய இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேரடி சமையல், இசை நிகழ்ச்சிகளும் உண்டு. சென்ற ஆண்டு 650,000க்கும் மேற்பட்ட மக்கள் சந்தைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு சற்று அதிகமாக ஏறத்தாழ 700,000 பேர் செல்வார்கள் என நம்பப்படுகிறது.

சென்ற ஆண்டு கம்போங் கிளாம் சந்தையில் இந்தியக் கடைகள் ஓரளவுக்கு இருந்தன. இம்முறை மிஸ்டர் வடை, தி ஒரிஜினல் வடை ஆகிய கடைகள் தவிர்த்து வேறு இந்திய உணவுக் கடைகள் எதுவும் காணப்படவில்லை.

எனினும், கண்ணைப் பறிக்கும் வண்ணம் வித்தியாசமான பற்பல உணவு வகைகள் இம்முறை இடம்பெற்றுள்ளன. பல நிறங்களில் இனிப்பு பானங்கள், மேற்கத்திய உணவு வகைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.

பெயர்பெற்ற மெக்சிகன் உணவாக ‘டாகோஸ்’ எனப்படும் கோதுமையால் செய்யப்பட்ட உணவு சிங்கப்பூரர்களின் சுவைக்கு ஏற்றவாறு, மூலப்பொருள்களை மாற்றியமைத்து செய்துள்ளார்கள். அது இளையர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறது.

வழக்கமான உணவு லாரிகளும் உண்டு. ராம்லி பர்கர், ஹாட் டாக், ஃபிரைஸ், கோரேங் பிசாங், பிரியாணி போன்ற உணவு வகைகள் இந்த ஆண்டும் விற்கப்படுகின்றன. துருக்கிய உணவு வகைகளை ருசிப்போருக்கு கவலை வேண்டாம். பிரபல கெபாப், ஷவர்மா ஆகிய உணவுகளும் கிடைக்கின்றன.

“நாங்கள் தவறாமல் ரமலான் சந்தைக்கு ஒவ்வோர் ஆண்டும் செல்வோம். இந்த ஆண்டு வந்துள்ள புதிய வகைகளில் உணவுகளைச் சுவைக்க ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார் குடும்பத்தோடு சந்தைக்குச் சென்றிருந்த பேருந்து ஓட்டுநர் முகமது அன்சாரி, 50.

சந்தையில் விற்கப்படும் பொருள்களின் விலை, குறிப்பாக ஆடை அணிகலன்களின் விலை சற்று அதிகமாக உள்ளதாகக் கூறினார் முதல் முறையாக ரமலான் சந்தைக்குச் சென்ற திருவாட்டி ஃபரிதா பீபி அப்துல் காதித், 61.

முதல்முறை ரமலான் சந்தைக்குச் செல்லும் மற்றொருவரான மாலா ராமநாதன், 36, பலவிதமான மலாய் உணவு வகைகளைச் சுவைக்க உள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்