தெம்பனிஸ் நகர மன்றத்தை ஏமாற்றியதாக ‘எஃப்ஒய்எச் இன்டிகிரேடட்’ எனும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஜாங் ஷுயான் மீது புதன்கிழமை (மார்ச் 13) குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைபட்ட காலத்தில் குழாய் பராமரிப்பு பணியின் குத்தகையைத் தெம்பனிஸ் நகர மன்றம் சிங்கப்பூரரான ஜாங் இயக்குநராக இருந்த கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கியது.
இத்தகவலை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) தெரிவித்தனர்.
அப்போது அவர், நீர்க்குழாய்களைப் பொருத்தும் பணிக்காக 203 கட்டண ரசீதுகளைத் தெம்பனிஸ் நகர மன்றத்திடம் சமர்ப்பித்தார் எனக் காவல்துறை கூறியது.
மேலும், அவற்றின் மதிப்பு $380,000க்கும் மேல் இருக்கும் எனவும் அது குறிப்பிட்டது.
அவர் நகர மன்றத்திடம் சமர்ப்பித்த ரசீதுகளில் குறிப்பிட்ட குழாய்கள் ஒன்றாகவும் அவர் பொருத்திய குழாய்கள் வேறாகவும் இருந்ததாக அது தெரிவித்தது.
ஜாங், விலைக் குறைவான குழாய்களைப் பொருத்தியதாகக் கூறப்படுகிறது.
அவர்மீது இரண்டு மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜாங் மீதான வழக்கு ஏப்ரல் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.