டெலிகிராம் செயலி வழி கர்ப்பமான எறும்புதின்னியை (பங்கோலின்) விற்ற ஆடவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லீ கியான் ஹான் என்ற அந்த 35 வயது ஆடவருக்கு சுண்டா எறும்புதின்னியை சட்டவிரோதமாக விற்றக் குற்றத்திற்காக புதன்கிழமை (மார்ச் 13) தண்டனை விதிக்கப்பட்டது.
தேசிய பூங்கா வாரியத்தின் அதிகாரி ஒருவர் தமது அடையாளத்தை மறைத்து மூன்றாவது நபர் போல் லீயிடம் பேசி எறும்புதின்னியை வாங்க முன்வந்தார்.
அதன் பின்னர் லீ எறும்புதின்னியுடன் அதிகாரிகளிடம் சிக்கினார்.
லீயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர் டேமியன் டான் என்னும் 21 வயது ஆடவரிடம் இருந்து எறும்புதின்னியை வாங்கியது தெரியவந்தது.
2023ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று சமூக ஊடகத்தில் எறும்புதின்னி விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தைக் கண்டு விளையாட்டாக எறும்புதின்னியை 1,400 வெள்ளிக்கு வாங்கியதாக லீ கூறினார்.
எறும்புதின்னியை வைத்து என்ன செய்வது என்று தெரியாததால் அதை விற்க முடிவெடுத்ததாக லீ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி டேமியனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மிக அரிய வகை விலங்கு இனங்களில் சுண்டா எறும்புதின்னியும் ஒன்று. அதை காடுகளில் இருந்து பிடிப்பது சட்டவிரோதமானது.
அரிய வகை விலங்குகளை விற்பனை செய்தால் 50,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.