தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ‘இமர்ஜிங் டெக்னாலஜிஸ்’ பிரிவின் ரஸ்ஸல் தாம் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக வெள்ளிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) அன்று பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு தாம் திரு சான் யெங் கிட்டுக்கு பதிலாக தமது புதிய பொறுப்பை ஏற்கிறார். திரு சான் யெங் கிட் எஸ்பிஎச் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் சபையில் பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு தாம், வயது 56, கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தகவல், தொடர்பு ஊடக நிறுவனத்தின் இயக்குநர் சபை உறுப்பினராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அந்நிறுவனத்தின் தொழில்நுட்பத் துணைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவரைப் பற்றிய அறிக்கை ஒன்றில் தொடர்பு, தகவல் அமைச்சு, “அவருடைய அனுபவம், நிபுணத்துவத்தைக் கொண்டு திரு தாம் புதிய, வளர்ந்து வரும் மின்னிலக்க தொழில்நுட்பங்கள், அவற்றின் வர்த்தகத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது, அவை வருங்கால கொள்கை முடிவுகளில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகியன குறித்து தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்,” என்று கூறியது.
எஸ்பிஎச் ஊடக நிறுவன இயக்குநர் சபை உறுப்பினராகப் பொறுப்பேற்கும் திரு சான் யெங் கிட், 59, கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருக்கிறார். இவர் 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர், 2008ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை முந்தைய தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சின் நிரந்தரச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைய இயக்குநர் சபையில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியபின் அவர் அதைவிட்டுச் செல்கிறார்.
இது பற்றிய தனது மார்ச் 13ஆம் அறிக்கையில் எஸ்பிஎச் ஊடக நிறுவனம் திரு சான் பொதுத் துறை, தொழிலாளர் இயக்கம், தனியார் துறை போன்றவற்றில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்துள்ளார் என்று நினைவுகூர்ந்தது. அத்துடன், இவர் ‘எம்ஓஎச் ஹோல்டிங்ஸ்’ என்ற சுகாதார அமைச்சின் துணை நிறுவனத்துக்கு தலைவராகவும் மத்திய சேம நிதிக் கழக துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்று கூறியது.