சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற கௌரவ பேராசிரியர் கே.ஜே. ரத்னம் மார்ச் 10ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 88.
திரு ரத்னத்தின் மறைவு பற்றி என்யுஎஸ் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதி அறிவித்தது. அதில் பேராசிரியர் ரத்னம் ஒரு பெருமதிப்புமிக்க அரசியல் விஞ்ஞானி, கல்வியாளர், கல்விமான் என்று புகழுரைத்திருந்தது.
சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவு முதன் முதலில் 1961ல் உருவாக்கம் பெற்றபோது அதன் முக்கிய உறுப்பினராக பேராசிரியர் ரத்னம் இருந்தார். பின்னர் 1965ல் அவர் அப்பிரிவின் தலைவராக உயர்வு பெற்றார் என்றும் என்யுஎஸ் தெரிவித்தது.
பேராசிரியர் ரத்னத்தின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய், “அரசியல் அறிவியல், கல்வித் துறையில் பேராசிரியர் ரத்னம் வெளிப்படுத்திய சிறந்த கற்பித்தல் முறையால் பல தலைமுறைத் தலைவர்கள் உருவாகினர்,” என்று கூறினார்.
1965 முதல் 1970 வரை, பேராசிரியர் ரத்னம், என்யுஎஸ் பல்கலைக்கழகத்துக்கு முன்பிருந்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் தலைவராக இருந்தார்.
1966 ஏப்ரலில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த செய்தியில், பேராசிரியர் ரத்னம் அப்பல்கலைக்கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட சமூக அறிவியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 30 வயதே ஆன நிலையில், கோலாலம்பூரில் பிறந்த அந்தக் கல்வியாளர் அப்பல்கலைக்கழகத்தின் ஆக இளைய துறைத் தலைவர் என்ற சிறப்பையும் பெற்றார்.
என்யுஎஸ்-சில் உள்ள கலை மற்றும் சமூக அறிவியல் துறையின் அரசியல் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் சான் ஹெங் சீ, சிங்கப்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் தாம் பட்டக் கல்வி மாணவராக இருந்தபோது பேராசிரியர் ரத்னத்தின் வழிகாட்டுதல் தாம் பல சிகரங்களைத் தாண்ட உதவியது என்றார்.
பேராசிரியர் சான் தற்போது வெளியுறவு அமைச்சின் பொதுத் தூதராகவும் என்யுஎஸ் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
கடந்த சில நாள்களாகவே தமது தந்தையின் நாடித்துடிப்பு வலுவிழந்து காணப்பட்டது என்றும் அவர் மார்ச் 11ஆம் தேதி மருத்துவரைக் காண தேதி குறிக்கப்பட்டிருந்தது என்றும் பேராசிரியர் ரத்னத்தின் புதல்வர் கயான் ரத்னம் கட்ஸி ஏஷியா எனும் இணையத் தளத்திடம் தெரிவித்தார்.
“மார்ச் 10ஆம் தேதி இரவு, அவர் படித்துக்கொண்டிருக்கும்போது மேசையிலே தலை சரிந்து கிடந்ததை அவரைக் கவனித்துக்கொள்ளும் தாதி பார்த்தார். அவருக்கு தாதி முதலுதவி செய்தார்.
“மருத்துவ வாகனத்துடன் நான் வந்து சேர்ந்ததும் அவரை மருத்துவ அதிகாரிகள் சோதித்தனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டது,” என்றும் திரு கயான் கூறினார்.