புனித வெள்ளிக்கு முந்தைய நாளான மார்ச் 28ஆம் தேதி அதிக போக்குவரத்து வாய்ப்புகளை வழங்க பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி அனைத்து எம்ஆர்டி தடங்களிலும் சேவை நீட்டிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பேருந்து சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு தடங்களில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ் மற்றும் துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தை நோக்கிச் செல்லும் வட்ட ரயில் பாதையில் பயணம் செய்யும் பயணிகள் கடைசி ரயிலை டோபி காட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இரவு 11.43 மணிக்கு எடுக்கலாம்.
ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்குச் சென்று திரும்பும் பயணிகள் தற்காலிக சேவை மாற்றம் காரணமாக லாபரடார் பார்க்கில் மாற வேண்டியிருக்கும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் கார்டன்ஸ் பை த பே நோக்கிச் செல்லும் கடைசி ரயில் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து காலை 12.02 மணிக்குப் புறப்படும். அதே நிலையத்தில் எதிர் திசையிலிருந்து கடைசி ரயில் பின்னிரவு 12.25 மணிக்குப் புறப்படும்.
வடக்கு கிழக்கு தடத்தில் (என்இஎல்) பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் ஹார்பர்ஃபிரண்டிலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும்.
வடக்கு கிழக்கு தடத்தில் கடைசி ரயில்கள் அவற்றுக்குரிய நகர நிலையங்களை முறையே சென்று அடையும் வரை செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ரயில்கள் இயங்கும்.