சைனாடவுனில் உள்ள மேம்பாலத்தில் பாரந்தூக்கி மோதியதைத் தொடர்ந்து அதை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மார்ச் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஹில் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் இயூ தோங் சென் ஸ்திரீட்டில் நடந்த சம்பவம் குறித்துக் காலை 11.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
லாரி ஓட்டுநரான 46 வயது ஆடவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காவல்துறை அல்லது துணைக்காவல் படை அதிகாரியின் பாதுகாப்பு இன்றி மொத்தம் 4.5 மீட்டருக்குமேல் உயரமான கனரக வாகனத்தை ஓட்டியதற்காக அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து லாரி ஒருபக்கமாகச் சாய்ந்து காணப்பட்டதாகவும் அதன் முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் ஷின் மின் நாளேடு தெரிவித்தது. லாரியின் கதவில் ‘கேஎச் வேஸ்ட் ஹாலேஜ் சர்வீசஸ்’ எனும் நிறுவனப் பெயர் எழுதப்பட்டிருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, காவல்துறை காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.