ஊழியர்களின் மனநலனை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் வழிகாட்டிகளை வரையும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனநலன் மேம்படுவதால் ஏற்படும் வர்த்தக ரீதியான பலன்களை நிறுவனங்களுக்கு எடுத்துச்சொல்வதும் இம்முயற்சியின் நோக்கமாகும்.
ஊழியர்களின் மனநலனை மேம்படுத்த தற்போது மனநல ஆலோசனை, யோகாசன வகுப்புகள் போன்றவற்றை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கி வருவதாகப் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வேலையிடத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்கள் ஊழியர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயும் முயற்சியில் வொர்க்வெல் லீடர்ஸ் (டபிள்யுடபிள்யுஎல்) எனும் உள்ளூர் நன்கொடை அமைப்பு இப்போது இறங்கியுள்ளது.
வேலையிடங்களில் ஊழியர் நலனுக்கான முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் டபிள்யுடபிள்யுஎல், கூடுதல் மீள்திறனுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் ஊழியர்கள் எவ்வாறு ஆக்கபூர்வம், புத்தாக்கம் போன்ற அம்சங்களில் நிறுவனங்களுக்குக் கைகொடுப்பர் என்பதைக் கணிக்கும் முயற்சியையும் மேற்கொள்கிறது.
ஊழியர் நலனுக்கான சிறந்த வழிமுறைகளை அடையாளம் காண டபிள்யுடபிள்யுஎல் குழு ஒன்றை அமைத்துள்ளது. நிறுவனங்கள் அந்த வழிமுறைகளை வழிகாட்டியாகப் பயன்படுத்தச் செய்வது இலக்கு.
இச்சேவையை அந்த அமைப்பு இலவசமாக வழங்குகிறது.
இவ்வாண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் தங்களின் ஆய்வை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இவ்வாண்டு இறுதியிலோ அடுத்த ஆண்டோ முடிவுகளை வெளியிட எண்ணம் கொண்டுள்ளது.
உலகளவில் இத்தகைய வழிமுறைகள் வரையப்படுவது இதுவே முதல்முறை என்று டபிள்யுடபிள்யுஎல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான அந்தியா ஓங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.