வாரயிறுதிகளில் தனது வீட்டில் தங்கிய 8 வயதுப் பேத்தியைக் கிட்டத்தட்ட ஒன்பதுமுறை மானபங்கப்படுத்திய 74 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே அவர் அந்தக் குற்றங்களைப் புரிந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஆடவரின் மகனான தன் தந்தையிடம் நடந்தது குறித்துக் கூறியதையடுத்து அவர் இது குறித்துக் கேட்டபோது முதியவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் தந்தை மீது மகன் புகாரளிக்கவில்லை. 2021 ஏப்ரலில் சிறுமி தன் வகுப்பாசிரியரிடம் நடந்ததைக் கூறினார்.
பள்ளி ஆலோசகரிடம் அவர் அதைக் கூறியதையடுத்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. முதியவர் தன் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டை மார்ச் 15ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அவருக்கு ஈராண்டு, ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு முதியவரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.