எட்டு வயது சிறுமியின் வீட்டின் குளிரூட்டிச் சாதனத்தின் பழுதுபார்ப்புப் பணிக்காக 2021 நடுப்பகுதியில் வந்த தொழில்நுட்பர் ஒருவர் அச்சிறுமியை அவ்வீட்டின் மாடத்துக்கு அழைத்துச் சென்று மானபங்கப்படுத்தினார்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு, மொல்லா ஷோஹிதுல் எனும் அந்த பங்ளாதேஷ் நாட்டவர், உடல் சுகமில்லை என்று கூறி வேலைக்குச் செல்லவில்லை. தனது தங்குவிடுதியில் ஓய்வு எடுப்பதை விடுத்து மொல்லா, அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரை வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்று மீண்டும் மானபங்கப்படுத்தினார். மேலும் தனது கைப்பேசியைக் கொண்டு சிறுமியின் அந்தரங்க உறுப்புகளையும் படம் பிடித்தார்.
இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்த 32 வயது மொல்லாவுக்கு மார்ச் 15ஆம் தேதி ஐந்து ஆண்டு ஆறு மாதங்கள் சிறையும் எட்டு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது பெயரை வெளியிட தடை விதிக்கப்பட்டது. மொல்லா இருந்த தங்குவிடுதி மற்றும் சிறுமியின் வீட்டு முகவரியும் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டன.
2021 ஜூன் மாதத்துக்கும் 2022 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மொல்லா சிறுமியின் வீட்டுக்குக் குறைந்தது ஐந்து முறை சென்று தன்னை சிறுமியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“அந்த ஆடவரின் செயல் தவறானது என்று அறியாத பாதிக்கப்பட்ட சிறுமி அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அது குறித்து யாரிடமும் அவர் கூறவில்லை,” என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்களான லிம் யு ஹுவியும் ஹுவோ ஜியோங்ருயியும் நீதிமன்றத்தில் கூறினர்.
இப்படியாக மற்றொரு முறை சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரச் சொன்ன மொல்லா, அருகிலுள்ள படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அந்தப் பாலியல் குற்றத்தைப் புரிந்தார்.
பின்னர் வீடு திரும்பிய சிறுமி, வீட்டின் இரும்புக் கதவை மூடுவதைப் பார்த்த அவ்வீட்டின் பணிப்பெண், சிறுமியை விசாரித்தார். சிறுமி நடந்ததை அவரிடம் ஒப்புவித்தார்.
இது குறித்து அச்சிறுமியின் தாயாரிடம் உடனே தெரிவித்தார் பணிப்பெண். சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
2022, மே 6ஆம் தேதி மொல்லா கைது செய்யப்பட்டார். அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து சோதித்த அதிகாரிகள் அதில் சிறுமியின் ஆபாசப் புகைப்படங்கள் இருந்ததைப் பார்த்தனர்.
தனது குற்றச்சாட்டுகளை மறுத்து, நீதிமன்ற விசாரணை கோரிய மொல்லா, மார்ச் 14ஆம் தேதி தனது குற்றங்களை ஒப்புக்கொள்ள முடிவெடுத்தார்.