சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் காணாமல்போன கப்பல் பணியாளரைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
அந்நிலையம் கடல்துறை, துறைமுக ஆணையத்தால் இயக்கப்படுகிறது.
காணாமல்போனவர், லைபீரியா கொடி ஏந்திய ‘உதோப்பியா’ எனும் கப்பலில் இருந்தார்.
அவரைத் தேட கடல்துறை, துறைமுக ஆணையம், கடலோரக் காவல்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஆணையம் கூறியது.
காணாமல்போனவர் குறித்து தகவல் அறிந்தால் அது பற்றி கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திடம் தெரியப்படுத்துமாறு அப்பகுதியில் செல்லும் மற்ற கப்பல்களிடம் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.