சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் இனவாத வாசகம் இடம்பெற்றிருப்பது குறித்து சிங்கப்பூர் ஆயுதப்படை விசாரித்து வருகிறது.
அந்தப் படம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
‘இன்ஸ்டகிராம் ஸ்டோரிஸ்’ எனும் சமூக வலைத்தளத்தில் புதன்கிழமை (மார்ச் 13) பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தப் படத்தில், ஆறு ராணுவ வீரர்கள் சாயம் பூசப்பட்ட முகங்களுடன் காட்டுப்பகுதியில் துப்பாக்கிகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற இனவாத வாசகம், நிறம் குறைவாக உள்ளோரைத் தாழ்த்தும் விதத்தில் இருந்தது. அந்தப் படத்தைப் பதிவிட்ட ‘இன்ஸ்டகிராம் ஸ்டோரிஸ்’ பக்கம் தனிப்பட்ட முறைக்கு மாற்றப்பட்டது. அந்தப் பக்கத்தின் தோற்றப் படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை அதன் சேவையாளர்கள் உயர்தர கட்டொழுங்கு, நேர்மையைக் கடைப்பிடிப்பதை தான் உறுதிசெய்வதாகக் கூறியது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரபூர்வமற்ற புகைப்படங்கள் எடுப்பது குறித்து தெளிவான கொள்கைகள், விதிமுறைகள் இருப்பதாக சொன்ன அமைச்சு, தரக் குறைவான வாசகங்களின் பயன்பாட்டை சிங்கப்பூர் ஆயுதப்படை பொறுத்துக்கொள்ளாது என்றது.