ஜூரோங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதசாரி ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்ததாக நம்பப்படும் லாரி ஓட்டுநர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று (மார்ச் 16) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக 35 வயது மலேசியரான சாஃபுவான் டெஹ்டா மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று காலை 9.30 மணியளவில் ஜுரோங் வெஸ்ட் அவென்யு 2 - புலிம் அவென்யு சந்திப்பில் சாஃபுவான், திரு கோ எங் லூ எனும் ஆடவரை மோதியதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டது.
திரு கோ ஸீப்ரா சாலைக் கடப்பில் நடந்துகொண்டிருந்தபோது சாஃபுவான் அவருக்கு வழிவிடவில்லை என்று கருதப்படுகிறது. 57 வயதான திரு கோ நினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15) காவல்துறையினர் தெரிவித்தனர். மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை கூறியது.
சம்பவம் நிகழ்ந்தபோது சாஃபுவான், திரு கோவுக்கு உதவ லாரியை நிறுத்தவில்லை என்றும் விபத்து நிகழ்ந்து 24 மணிநேரத்துக்குள் தங்களுக்குத் தகவல் அளிக்கவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது. அவர் உடனடியாக மலேசியாவுக்குத் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவரும் நிலப் போக்குவரத்து ஆணையமும் சமர்ப்பித்த ஆதாரங்களைக் கொண்டு அன்றைய தினமே சாஃபுவானின் லாரி எண் அடையாளம் காணப்பட்டது; சாஃபுவானின் அடையாளமும் தெரிய வந்தது. போக்குவரத்துக் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
விபத்து நிகழ்ந்து ஆறு மாதங்கள் கழித்து வியாழக்கிழமை (மார்ச் 14) சாஃபுவான் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் அவருக்கான கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
சாஃபுவான், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் தேதியன்று அவரின் வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.
சாஃபுவான், சிங்கப்பூரில் மரணம் விளைவித்த விபத்து ஒன்றில் ஈடுபட்டு மலேசியாவுக்குத் தப்பியோடியதாக நம்பப்படும் இரண்டாவது நபராவார். பிப்ரவரி மாதம் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மரணம் ஏற்பட்ட விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது மலேசியரான புவா யுய் லூன் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.