பலர் 10 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழக்க நேரிட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 339 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேக நபர்களில் 231 பேர் ஆண்கள், 108 பேர் பெண்கள்; அவர்கள் 16லிருந்து 76 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டது.
இம்மாதம் ஒன்றாம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறியடிப்பு நடவடிக்கையில் சந்தேக நபர்கள் பிடிபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலீட்டு மோசடி, இணையக் காதல் மோசடி, மின்வர்த்தக மோசடி உள்ளிட்ட 1,100க்கும் அதிகமான ஏமாற்றுச் செயல்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. ஏமாற்று வேலை, கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது, உரிமமின்றி கட்டணச் சேவைகளை வழங்கியது போன்ற குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாரேனும் தங்களின் வங்கிக் கணக்கையோ கைப்பேசித் தொடர்பையோ பயன்படுத்த கேட்டுக்கொண்டால் விவரங்களைத் தரவேண்டாம் என்று காவல்துறை, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது. விவரங்களைத் தந்தால் குற்றச் செயல்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டோரும் உடந்தையாக இருப்பர் என்று காவல்துறை வலியுறுத்தியது.