சிங்கப்பூருக்கு வெளியே பெங்களூரில் சேட்ஸ் நிறுவனத்தின் ஆகப் பெரிய உணவு வளாகம்

2 mins read
03af8bdb-c8aa-44e7-874e-47d8c32b01c9
சிங்கப்பூரின் சேட்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்கும் சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் இந்தியா, அதன் ஆகப் பெரிய அனைத்துலக உணவுத் தீர்வு வளாகத்தை பெங்களூரில் திறந்துள்ளது. - படம்: சேட்ஸ்

பெங்களூரு: சிங்கப்பூரின் ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் கடல்தாண்டி திறந்துள்ள ஆகப் பெரிய உணவுத் தயாரிப்பு வளாகம், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது.

இந்த 210,000 சதுர அடி மையச் சமையற்கூடம், $61 மில்லியன் மதிப்பிலான முதலீட்டுடன் மார்ச் 15ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.

தாய்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலும் சேட்ஸ் நிறுவனத்தின் சமையற்கூடங்கள் உள்ளன. இதற்குமுன் சீனாவில் அதன் ஆகப் பெரிய சமையல் வளாகத்தைக் கொண்டிருந்தது நிறுவனம்.

தற்போது பெங்களூரில் திறந்துள்ள சமையற்கூடம், சீனாவின் வளாகத்தைக் காட்டிலும் 20% பெரியது.

புதிய வளாகத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொட்டலங்கள், நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்பவும் இருக்கும் என்று கூறியது சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் இந்தியா.
புதிய வளாகத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொட்டலங்கள், நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ஏற்பவும் இருக்கும் என்று கூறியது சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் இந்தியா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு நாளில் 40 டன் உணவைத் தயாரிக்கும் ஆற்றல் கொண்ட இது, சீரகச் சோறு, ‘பட்டர் சிக்கன்’, கோழி பிரியாணி போன்ற இந்திய உணவுவகைகளுடன் சிங்கப்பூரின் ‘சில்லி நண்டு’ உணவையும் வழங்குகிறது.

சமைக்கப்பட்ட இந்த உணவுவகைகள், உறையவைக்கப்பட்ட பிறகு தயார்நிலை உணவாகப் பொட்டலமிடப்படுகின்றன.

தளவாடச் சேவையுடன் விமான நிறுவனங்களுக்கு உணவு வழங்கும் சேவை வழங்குநராக சேட்ஸ் நிறுவனம் 50 ஆண்டுகாலமாக அதன் முத்திரையைப் பதித்துவருகிறது.

இந்நிலையில், பேரளவிலான உணவுத் தீர்வு நிலையமாக இந்தியாவிலுள்ள இந்த மையச் சமையற்கூடம் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘செவன் லெவன்’ போன்ற கடைகள், மருத்துவமனைகள், உணவு விநியோகச் செயலிகள், உடனடி உணவு வழங்கும் உணவகங்கள் என விமானத்துறையில் இல்லாத வாடிக்கையாளர்களுக்கும் இந்த மையச் சமையற்கூடம் ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் புதிய சமையற்கூடத்தின் திறப்பு விழாவில் இந்தியாவுக்கான சிங்கப்பூரின் உயர் ஆணையர் சைமன் வோங் (வலக்கோடி), ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் இந்தியா’வின் இயக்குநர் சாகர் டிகே (இடக்கோடி), ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டேன்லி கோ (இடமிருந்து 3வது) கலந்துகொண்டனர்.
பெங்களூரில் புதிய சமையற்கூடத்தின் திறப்பு விழாவில் இந்தியாவுக்கான சிங்கப்பூரின் உயர் ஆணையர் சைமன் வோங் (வலக்கோடி), ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ் இந்தியா’வின் இயக்குநர் சாகர் டிகே (இடக்கோடி), ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டேன்லி கோ (இடமிருந்து 3வது) கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இந்தியாவில் தயார்நிலை உணவு, சூடேற்றும் உணவுச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இளம், நகர்ப்புற இந்தியர்கள் பலர், பல இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவத்தாலும் நன்கு விவரம் அறிந்துள்ளதாலும் தங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையை விரும்புகின்றனர்.

“உண்மையான சுவை தொடர்பில் அவர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் விரும்புகிறோம்,” என்று ‘சேட்ஸ் ஃபுட் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டேன்லி கோ, பெங்களூரு வளாகத்தைத் திறந்துவைத்த நிகழ்வில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்