கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வரும் தொழில், பலரின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது என நம்புகிறேன்.
உடற்குறை உள்ளவர்களுக்குக் கைகொடுக்கும் எஸ்பிடி அமைப்பில் நான் சேவையாற்றுகிறேன்.
அனைவரும் இயல்பாகவே சீரோட்டத்துடன் பேசுவதில்லை. சிலர் திக்கித் தடுமாறிப் பேசுவர். இந்தப் பிரச்சினை எல்லா வயது பிரிவினருக்கும் உள்ளது.
சிகிச்சை தேவைப்படுவோருக்கு நான் வழிகாட்டி, குறுகியகாலத்தில் சில இலக்குகளை வகுத்துத் தருவேன்.
நன்சியாவ் தொடக்கப்பள்ளி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி ஆகிய பள்ளிகளில் பயின்ற எனக்கு, சமூகச் சேவையிலும் சுகாதாரத் துறையிலும் பணியாற்றும் விருப்பம் சிறுவயது முதல் இருந்து வந்தது.
2013 எச்2 நிலையில் நான் ஆங்கிலம் மற்றும் மொழியியலைப் பயின்றது என் தெரிவுக்கு உதவியாக இருந்தது.
பள்ளிப்பருவத்தில் தொண்டூழியம் செய்துகொண்டிருந்தபோது பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தேன். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பயின்ற பிறகு உடனே பேச்சு சிகிச்சைக்கான மேற்கல்வியைத் தொடர்ந்தேன்.
இத்துறையில் பயின்றபோது நான் முன்னர் கொண்டிருந்த மனப்போக்கும் எண்ணமும் மாறின. சுயநலச் சிந்தனை மாறி, பிறர் தேவைகளை உன்னிப்பாகக் கவனிக்கும் தன்மை என்னுள் ஏற்பட்டது.
என் உழைப்புக்கும் திறமைக்கும் மதிப்பு தரும் விதமாக கல்வித்தகுதியை மேம்படுத்தும் வாய்ப்பினையும் இந்தத் துறை வழங்கியுள்ளது.
பேச்சு, மொழி சம்பந்தப்பட்ட நோய்களைப் பற்றி படிப்பில் முதுகலை பெற்றுள்ள நான், என்சிஎஸ்எஸ் எனப்படும் தேசிய சமூகச் சேவைகள் மன்றத்தின் சமூக சேவைகளுக்கான கல்விமான் விருது பெற்றேன்.
சிகிச்சை மையங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சுழற்சி முறையில் பணிபுரியும் வாய்ப்பினை இந்த விருது வழங்குகிறது.
என்னைப் போன்ற இளையர்களை ஈர்த்து அவர்களைத் திறனாளர்களாக உருவாக்க என்சிஎஸ்எஸ் அமைப்பு, புதிதாக ‘டிஎஸ்எஸ்’ எனப்படும் உருமாற்ற நிலைத்தன்மைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
100 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட தொகை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு சமூகச் சேவைத்துறையின் நிர்வாகத் திறனை உரப்படுத்த உள்ளது.
என் வேலையை நான் மிகவும் நேசிப்பதால் அதைத் தொடர்ந்து செய்வேன்.
சில நேரங்களில் சிறப்புத் தேவையுடைய ஒரு சிலரால் சவால்கள் ஏற்படும்போது அதனைச் சமாளிப்பதில் தொடர்ந்து நிறைவு காண்பேன். ஒவ்வோர் அனுபவமும் ஒரு பாடம்தான்.