கோத்தா திங்கி: ஜோகூரில் உள்ள உலு செடிலி ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 49 வயது சிங்கப்பூர் ஆடவரை ஜோகூர் அதிகாரிகள் மார்ச் 15ஆம் தேதி மீட்டனர்.
கிறிஸ்டோஃபர் லிம், ஜலான் கோத்தா திங்கி - மெர்சிங் வழியாகத் தனது ‘எம்பிவி’ எனப்படும் பல்பயன்பாட்டு காரை ஓட்டிச்சென்றார்.
அப்போது அவர் கட்டுப்பாட்டை இழக்கவே அந்த டொயோட்டா அல்ஃபார்டு கார் ஆற்றில் விழுந்ததாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
வழிப்போக்கர்கள் மாலை 4 மணியளவில் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு அனுப்பப்பட்டது.
அவர்கள் ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் ஒரு காரையும் அதில் சிக்கியிருந்த ஓட்டுநரையும் கண்டனர். காரின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. அதன் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கிக் காணப்பட்டது.
மார்ச் 16 ஆம் தேதி ‘சைனா பிரஸ்’ ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், காருக்குள் நீர் பாய்ந்த நிலையில் அதன் ஓட்டுநர் கிட்டத்தட்ட மூழ்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் நினைவிழந்த அந்த ஆடவர் மூச்சுவிடச் சிரமப்பட்டார். மீட்புக் குழுவினர் அவரை காரிலிருந்து மீட்டு, கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
சுற்றுலா வழிகாட்டி எனக் கருதப்படும் அந்த ஆடவருக்கு இதயத்தில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்று கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறை தெரிவித்தது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.